இஸ்ரேல் – ஈரான் மோதல்…இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம்?
இஸ்ரேல்-ஈரான் மோதன் எதிரொலியாக இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

டெல்லி : இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இரண்டு தரப்பும் மாற்றி மாற்றி தாக்குதல் நடத்தி வருவதன் காரணமாக பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழலில், இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை பாதிக்கலாம், ஏனெனில் இந்தியா தனது எண்ணெய் தேவையில் 88% இறக்குமதியை நம்பியுள்ளது.
முக்கிய எண்ணெய் விநியோக பாதைகளில் சிக்கல் ஏற்பட்டால், ஈராக், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து வரும் எண்ணெய் தடைபடலாம். இதனால், கச்சா எண்ணெய் விலை தற்போதைய 77 டாலரில் இருந்து 130 டாலர் வரை உயரலாம், இது பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தும்.
இந்தியா முக்கியமாக ரஷ்யா, ஈராக், சவுதி அரேபியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்கிறது. மோதல் காரணமாக எண்ணெய் விலை உயர்ந்தால், இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கும். 2025 ஜூன் 13 இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை 7-13% உயர்ந்து, ஒரு பேரலுக்கு 78 டாலரை எட்டியது. இது இந்தியாவின் இறக்குமதி செலவை அதிகரிக்கலாம், ரூபாயின் மதிப்பையும் பாதிக்கலாம்.
அப்படி பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏற்பட்டால் நிச்சயமாக இந்தியாவில் வாழ்க்கைச் செலவை அதிகரிக்கும். போக்குவரத்து, உற்பத்தி செலவுகள் உயர்ந்து, பொருட்களின் விலையும் ஏறலாம். இது குடும்பங்களின் பட்ஜெட்டை பாதிக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை தடுக்கலாம். மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு திட்டங்களும் தாமதமாகலாம். இதை சமாளிக்க, மத்திய அரசு ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. அரபு நாடுகளில் சிக்கல் ஏற்பட்டால், ரஷ்ய எண்ணெய் மலிவு விலையில் கிடைக்கலாம். தற்போது ரஷ்யாவில் இருந்து 35-44% எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.