இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!
6 இந்திய ஜெட் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் பிரதமரின் கூற்றை பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் நிராகரித்துள்ளார்.

டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக போகிறதோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியது என்று தான் சொல்லவேண்டும். ஆனால், இரண்டு நாடுகளும் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்திக்கொள்ள சம்மதம் தெரிவித்து போரை நிறுத்தியது.
அப்படி இருந்தும் கூட இன்னும் பரபரப்பு குறையவில்லை என்று சொல்லலாம். ஏனென்றால், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம் என இந்தியா தரப்பில் கூறப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக ராணுவத்தை சேர்ந்தவர்கள் இது குறித்து பேசிவருவதாலும் பிரதமர் மோடியும் இது குறித்து பேசி வருவதாலும் இது ஓயாத ஒரு புயலாக இருந்து வருகிறது.
இப்படியான சூழ்நிலையில், பாகிஸ்தான் உடனான மோதலின்போது இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதை முதல்முறையாக ஒப்புக்கொண்டு முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சௌகான் பேசியிருக்கிறார். இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் ” பாகிஸ்தானுடனான மோதலின்போது இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இது உண்மை தான். ஆனால், விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதை விட, தவறு எப்படி நடந்தது என்பதுதான் முக்கியம்.
எங்களது தவறை கண்டறிந்து, அதனை சரி செய்தோம்” என்று ஜெனரல் சௌகான் தெரிவித்தார், இந்திய விமானப்படை தனது செயல்பாடுகளில் ஏற்பட்ட பிழைகளை உடனடியாக சரிசெய்ததாக குறிப்பிட்டார். அது மட்டுமின்றி, இரு தினங்களுக்குப் பிறகு இலக்குகள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தினோம். அதைப்போல, பாகிஸ்தான் தரப்பு ஆறு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறியதை மறுத்து, “அது உண்மையில்லை” என்று திட்டவட்டமாக தளபதி அனில் சௌகான் தெரிவித்தார்.