“தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால்” இதான் நடக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
அதிமுக ஒட்டுமொத்தமாக பாஜகவின் கண்ட்ரோலுக்கு சென்றிருக்கிறது என்று மதுரை திமுக பொதுக்குழுவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சி மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக, பாஜக கூட்டணி குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.
இது தொடர்பாக பேசிய மு.க.ஸ்டாலின், ”தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மதக்கலவரங்களை உண்டாக்குவார்கள். சாதிக்கலவரங்களை தூண்டுவார்கள். மக்களை அனைத்து வகையிலும் பிளவுபடுத்துவார்கள்.
நம்முடைய பிள்ளைகளை படிக்க விட மாட்டார்கள். பிற்போக்குத்தனங்களில் நம்மை மூழ்கடிப்பார்கள். தொழில் வளர்ச்சி இருக்காது. இந்தி மொழித் திணிப்பு, பண்பாட்டுத் திணிப்பு செய்து, தமிழ்நாட்டின் தனித்துவத்தையே அழித்துவிடுவார்கள். அதிமுக-பாஜக கூட்டணியை அமித்ஷா அறிவித்தபோது பக்கத்தில் பவ்யமாக அமர்ந்திருந்தார் பழனிசாமி.
ஒட்டுமொத்தமாக பாஜகவின் கண்ட்ரோலுக்கு சென்றிருக்கிறது அதிமுக. அடுத்து, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பாஜகவின் கண்ட்ரோலுக்கு கொண்டு செல்லத்தான் எடப்பாடி பழனிசாமி துடிக்கிறார். எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது, டெல்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே Out of control தான்” என்று குறிப்பிட்டு இருந்தார்.