மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் – மாரியப்பனிடம் பிரதமர் மோடி பேச்சு!

Prime Minister Narendra Modi today spoke to Mariappan, a 2016 Olympic gold medalist, in a video presentation on the need to win gold at the Olympics in September.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காணொலிக் காட்சி மூலமாக 2016 ஆம் ஆண்டு தங்கம் வென்ற ஒலிம்பிக் வீரர் மாரியப்பனிடம் உரையாடியுள்ளார்.

பிரேசில் தலைநகர் ரியோவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றவர் தான் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு. தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020 ஆம் ஆண்டுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் வரும் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு மாரியப்பன் தங்கவேலு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுக்க கூடிய வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலமாக உரையாடியுள்ளார். அப்பொழுது மாரியப்பன் உடன் பேசிய பிரதமர், மீண்டும் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என மாரியப்பனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பின் பிரதமரியிடம் பேசிய மாரியப்பன், சிறு வயது முதல் தான் கஷ்டப்பட்டு படித்ததாகவும்,  விளையாட்டில் ஆர்வம் இருந்ததால் அதில் பயிற்சி எடுத்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், உயரம் தாண்டுதலில் தனக்கிருந்த ஆர்வத்தைக் கண்ட தனது விளையாட்டு விடுதி அதிகாரிகள் கொடுத்த பயிற்சியால் தான், ஒலிம்பிக்கில் தங்கம் பெற முடிந்தது என கூறியுள்ளார். இதனையடுத்து பிரதமர் மோடி அவர்கள் மாரியப்பனை பாராட்டியதுடன், நமது நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் மாரியப்பனின் தாயாரிடம் பேசிய பிரதமர் மோடி, மாரியப்பனை சந்தோஷமாக பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். மேலும் அவர் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு எது என மாரியப்பனின் தாயாரிடம் பிரதமர் கேட்டதற்கு, தனது மகன் நாட்டுக்கோழி மற்றும் சூப் ஆகியவற்றை விரும்பி சாப்பிடுவார் எனவும் தெரிவித்துள்ளார்.