டெல்லி :பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள் பயணமாக நைஜீரியா, பிரேசில், கயானா நாட்டிற்கு புறப்பட்டார். அதற்கான தனி விமானத்தில் பிரதமர் மோடி புறப்படும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அதற்கு முன்னர் தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில் பிரதமர் மோடி குறிப்பிடுகையில், “அடுத்த சில நாட்கள், நான் நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா நாடுகளில் இருப்பேன். பல்வேறு நாடுகளுடன் இந்தியாவின் உறவை மேம்படுத்த பலதரப்பு திட்டங்களில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரேசிலில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிறகு, கயானாவில் கரீபியன் நாட்டு தலைவர்களை சந்திப்பேன். இந்த பயணத்தின் போது வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் நான் உரையாடுவேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.
unknown nodeநைஜீரியா குடியரசுத் தலைவர் போலா அகமது டினுபுவின் அழைப்பை ஏற்று இன்று (நவம்பர் 16) தனி விமானம் மூலம் நைஜீரியா புறப்பட்டார் பிரதமர் மோடி. அங்கு இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து, இரு நாட்டு உறவை மேம்படுத்தும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர். இந்திய பிரதமர் 17 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக நைஜீரியாசெல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு நைஜீரிய வாழ் இந்தியர்களையும் சந்திக்க உள்ளார்.
அதன் பிறகு, நவம்பர் 18ஆம் தேதி பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி. அங்கு, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தலைமையில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அங்கு பன்னாட்டு தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.
பின்னர் கயானா அதிபர் முகமது இர்ஃபான் அலியின் அழைப்பை ஏற்று, நவம்பர் 19ஆம் தேதி கயானா நாட்டிற்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு அவருடன் சந்திப்பு நிகழ்த்துகிறார். இந்நிகழ்வில் இரு நாட்டு உறவை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளார். 1968க்கு பிறகு, இந்திய பிரதமர் கயானா செல்வது இதுவே முதல் முறையாகும். இறுதியாக 21ஆம் தேதி தனது 6 நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்புகிறார்.
