கேரளாவில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயிலில் பயங்கர தீ விபத்து…தீவிர விசாரணையில் போலீசார்…!!

கேரளா மாநிலத்தின் கண்ணூர்-ஆலப்புழா எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் (16306) ரயில், சேவை முடிந்து கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை 1:25 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை தீ பற்றி எரிந்த நிலையில், ரயிலின் 3 பெட்டிகள் தீயில் எரிந்து நாசமாகியது. மேலும், ரயிலின் ஒரு பெட்டியில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் பரவியதால் 3 பெட்டிகளில் தீ பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. தீ பிடித்து எரிந்த தகவல் தீயனைப்பு படையினருக்கு கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து, உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயனைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீ- யை அணைத்தனர். இந்த சம்பவத்திற்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கேனுடன் ரயிலுக்குள் நுழைந்தது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. எனவே, இது தீ வைப்பா என இது தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் மற்றும் கண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும், இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதம் இதே ரயிலில் கோழிக்கோடு மாவட்டம் ஏலத்தூரில் 3 பேரை ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த அதிர்ச்சியான சம்பவம் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.