ஊரடங்கை மீறியதற்காக சிறுவனை தாங்கிய போலீசார்....! பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்...!

A 17-year-old boy has died after being beaten by police for allegedly violating a curfew in Uttar Pradesh.

உத்திரப்பிரதேசத்தில் ஊரடங்கை மீறியதாக கூறி 17 வயது சிறுவனை போலீசார் தாக்கியதில், சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு.

இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பல மாநிலங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

உத்திரபிரதேசத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், உன்னவ் மாவட்டம், பங்கார்மாவு நகரில் உள்ள பாத்பூரி பகுதியில், 17 வயது சிறுவன் ஒருவர் நேற்று தனது வீட்டிற்கு வெளியே காய்கறி விற்பனை செய்து கொண்டு இருந்துள்ளார். இதனை பார்த்த, இரண்டு காவல் துறையினர் ஊரடங்கு மீறியதாகக் கூறி அந்த சிறுவனை லத்தியால் தாக்கியுள்ளனர். இதனை குடும்பத்தினர் வந்து தடுத்துள்ளனர். அப்போது விடாத போலீசார் அந்த சிறுவனை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தாக்கியுள்ளனர்.

போலீசார் தாக்குதலில் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவனை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காவல்துறையினர் கொண்டு சேர்த்தனர். ஆனால் மருத்துவர்கள் அந்த சிறுவனை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அறிந்த குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் அனைவரும் போலீசாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களையும் சிறுவனின் குடும்பத்தாரையும் போலீஸ் உயர் அதிகாரிகள் வந்து சமாதானம் செய்தனர். இதனை தொடர்ந்து சிறுவனை தாக்கிய போலீசார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட காவல் துறை வெளியிட்ட அறிவிப்பில் சிறுவனை தாக்கிய விவகாரத்தில் தலைமை காவலர் விஜய் சவுத்ரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஊர்க்காவல் படை வீரர் சத்யபிரகாஷ் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது  என்றும் தெரிவித்தனர்.