அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளன.

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முதல் பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்த முற்படுவதும், அதனை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்துவதுமாக செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது.
குறிப்பாக, பஞ்சாப், காஷ்மீர் உள்ளிட்ட இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியை ஒட்டிய மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
போர் பதற்றம் அதிகமாக இருக்கும் ஜம்மு காஷ்மீரில் பள்ளி கல்லூரிகள் காலவறையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. பஞ்சாபில் அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்படுவதாகவும், இமாச்சல் பிரதேசத்தில் உனா மாவட்டத்தில் மட்டும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பதான்கோட், ஃபெரோஸ்பூர், ஃபாசில்கா, அமிர்தசரஸ், குர்தாஸ்பூர் மற்றும் டர்ன் தரன் ஆகிய ஆறு எல்லை மாவட்டங்களில் காவல்துறையினரின் விடுமுறையை பஞ்சாப் மாநில அரசு ரத்து செய்துள்ளது. இதனால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போல டெல்லி அரசு தனது அனைத்து ஊழியர்களுக்கும் ஏற்கனவே அளித்த விடுமுறையை ரத்து செய்ய உத்தரவிட்டு, மாவட்டங்கள் முழுவதும் ஆயத்தப் பயிற்சிகளைத் தொடங்கியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள 5 மேற்கு மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஹரியானாவில் பஞ்ச்குலாவில் பள்ளிகள் மூடல் உட்பட சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை ஊழியர்களின் விடுமுறைகளையும் அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது.