I.N.D.I.A : இன்று துவங்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் .! காங். தலைவர் கார்கே தலைமையில் எம்பிகள் கூட்டம்.!

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் இன்று (செப்டம்பர் 18) முதல் வரும் வெள்ளி (செப்டம்பர் 22) வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தொடர் முதலில் அறிவிக்கப்படும் போது நிகழ்ச்சி நிரல் பற்றி குறிப்பிடப்படவில்லை. அதன் பிறகு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், சிறப்பு கூட்டத்தொடர் பற்றிய நிகழ்ச்சி நிரலானது வெளியிடப்பட்டது.
அதில் நாடாளுமன்றம் துவங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதை குறிப்பிட்டு முதல் நாளில் விவாதிக்கப்படும் என்றும், தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான மசோதா, வழக்கறிஞர் திருத்த சட்ட மசோதா , சட்டப்பேரவைகளில் பெண்களு 33 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட மசோதாக்கள் பற்றி இரு அவைகளிலும் விவாதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது.
இது தவிர மற்ற சில மசோதாக்களும் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டமானது முதல் நாள் மட்டும் பழைய கட்டிடத்திலும், மற்ற நான்கு நான்களும் புதியதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்திலும் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் இன்று இந்தியா கூட்டணி சார்பாக , காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஏதேனும் புதிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.