டெல்லி :இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா 2024 (Waqf (Amendment) Bill, 2024) தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா, 1995ஆம் ஆண்டு வக்பு சட்டத்தில் முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ளது. இதில் சுமார் 40 திருத்தங்கள் உள்ளடங்கியுள்ளன, மேலும் இது வக்பு சொத்துகளின் நிர்வாகம், பதிவு மற்றும் வாரியங்களின் செயல்பாடுகளை மறுசீரமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஏற்கனவே, இந்த மசோதா முதன்முதலில் 2024 ஆகஸ்ட் மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அவர்கள் இதை முஸ்லிம் சமூகத்தின் மத சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையாகவும், அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாகவும் விமர்சித்தனர்.
இதனால், மசோதா கூட்டு நாடாளுமன்றக் குழுவுக்கு (Joint Parliamentary Committee – JPC) அனுப்பப்பட்டு, விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. JPC, 19 கூட்டங்களுக்கு பிறகு, பிப்ரவரி 2025 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது, மேலும் சில திருத்தங்களுடன் மசோதாவை அங்கீகரித்தது.
அதனை தொடர்ந்து இன்று மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. இன்று தாக்கல் செய்யப்படவுள்ள இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பலரும், வக்பு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளதால் விவாதம் காரசாரமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
