NEET: நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை!

ராஜஸ்தானின் கோட்டாவில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு (NEET) தயாராகிக்கொண்டிருந்த 16 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ராஜஸ்தானில் உள்ள பயிற்சி மையமான கோட்டாவில் இந்த ஆண்டு எட்டு மாதங்களில் மட்டும் 25 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
கோட்டா நகரில் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 16 வயது மாணவி ரிச்சா சிங் என்பவர், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
JEE மற்றும் NEET போன்ற கூட்டு நுழைவுத் தேர்வுகளுக்குத் தகுதிபெறும் நம்பிக்கையில் ஆண்டுதோறும் சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் கோட்டாவுக்கு வருகிறார்கள். இந்த ஆண்டு, அந்த மாவட்டத்தில் தேர்வுகளின் அழுத்தத்தால் 25 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இது எந்த ஆண்டும் இல்லாத அதிமான எண்ணிக்கையாகும்.
இதற்கிடையில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், மாநிலத்தின் பயிற்சி நிறுவனங்களில், குறிப்பாக கோட்டாவில் உள்ள மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்க பரிந்துரைகளைக் கேட்டது. குழந்தைகளின் உளவியல் ஆலோசனையில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் நீதிமன்றம் வலியுறுத்தியது.