மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியானது 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள், நாட்டின் விலைவாசி உயர்வை பொறுத்து 6 மாதங்களுக்கு ஒரு முறை அவர்களின் ஊதியங்களின் அடிப்படையில் அகவிலைப்படி வழங்கப்படும். இந்த அகவிலைப்படையானது உயர்த்தப்பட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகி இருந்தது.
38 – 42 சதவீதம் :
அதன் படி, தற்போது அதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளார். ஏற்கனவே, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது 38 சதவீதமாக இருக்கும் நிலையில் அதனை 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் :
டெல்லியில் நேற்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சர் செய்தியாளர்களிடம் இதனை கூறினார். மேலும், இந்த நடவடிக்கையால் சுமார் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனவரி 01, 2023 :
இந்திய புதிய அகவிலைப்படி உயர்வானது, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியின் கூடுதல் தவணை மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி 01, 2023 முதல் அமலுக்கு வரும் என்றும், 7வது மத்திய ஊதிய குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும் தகவல் தெரிவிக்கின்றன.