கங்கை கரையில் மல்யுத்த வீரர்கள்... தடுத்து நிறுத்திய விவசாயிகள்.! 5 நாட்களில் தீர்வு..?

The farmers' association stopped the wrestlers who went to throw the medals on the banks of the Ganges. They promised a solution in 5 days

Farmers supports Wrestlers

கங்கை கரையில் பதக்கங்களை வீச சென்ற மல்யுத்த வீரர்களை விவசாய சங்கத்தினர் தடுத்து நிறுத்தினர்.

பாலியல் புகாரில் இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய கோரி நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் கடந்த ஏப்ரல் முதல் டெல்லி ஜந்தர்-மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வந்தனர். சரண் சிங் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீரர் வீராங்கனைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், சரண் சிங் மீது கைது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று புதிய நாடாளுமன்றத்தை நோக்கி போராட்ட வீரர்கள் பேரணியாக செல்லும் போது தடுத்து நிறுத்தப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். பின்னர் மீண்டும் டெல்லி ஜந்தர்-மந்தர் பகுதியில் அவர்கள் போராட்ட அனுமதி மறுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தொடர் போராட்டத்துக்கு பலனில்லாத காரணத்தால், தாங்கள் நாட்டுக்காக வாங்கிய பதக்கங்களை கங்கை ஆற்றில் விடப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீரர், வீராங்கனைகள் அறிவித்தனர்.

அதன்படி ஹரிதுவாரில் உள்ள கங்கை நதிகரைக்கு நேற்று வந்த வீரர்-வீராங்கனைகள் தாங்கள் போராடி வென்றெடுத்த பதக்கங்களை ஆற்றில் வீச முற்பட்டனர். அப்போது பாரதிய கிசான் யூனியன் எனும் விவசாய சங்கத்தினர் அங்கே சென்றனர். பின்னர் பதக்கங்களை கங்கையில் வீசும் முடிவை கைவிடுமாறு விவசாய சங்க தலைவர் நரேஷ் திகாயத் வீரர்களிடம் சமரசம் பேசினார் .மேலும் தங்களுக்கு ஐந்து நாட்கள் மட்டும் அவகாசம் தருமாறும் அதற்குள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.