எச்சரிக்கை…இன்று கரையை கடக்கிறது ‘மோக்கா’ புயல்…4 நாட்களுக்கு மழை நீடிக்கும்.!!

வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத்தீவிர மோக்கா புயலானது இன்று தென்கிழக்கு வங்கதேசம் வடக்கு மியான்மர் பகுதியில் கரையை கடக்கிறது.
மோக்கா புயல்
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத்தீவிர மோக்கா புயலானது அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 560 கிலோ மீட்டர் வடக்கு – வடமேற்கே நிலைகொண்டுள்ளது.
இந்நிலையில், இன்று மோக்கா புயல் தென்கிழக்கு வங்கதேசம் வடக்கு மியான்மர் இடையே அதிதீவிர புயலாக இன்று கரையை கடக்கிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 180கி.மீ – 190 கி.மீ வேகத்திலும், இடையிடையே 210 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.
முன் ஏற்பாடுகள் தீவிரம்
புயல் இன்று கரையையை கடக்கவுள்ள நிலையில், அதற்கான முன் ஏற்பாடுகள் அந்த இரு நாடுகளிலும் இப்போதே தொடங்கிவிட்டன. இது பங்களாதேஷின் காக்ஸ் பஜார் அருகே கரையைக் கடக்கும் என்பதால் காக்ஸ், பஜாரில் இருந்து சுமார் 2 லட்சம் பேரும், சிட்டகாங்கில் இருந்து 1 லட்சம் பேரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
புயல் காரணமாக, வங்கதேச கடற்கரையில் கடல் அலைகள் மிகப்பெரிய உயரத்திற்கு எழும்பும். கனமழை முதல் மிக கனமழை வரை நிலச்சரிவு அபாயம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தவிர, சிட்டகாங் துறைமுகமும் தற்போதைக்கு மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..?
மோக்கா புயல் கரையை கடப்பதன் காரணமாக தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்குமென கணிக்கப்பட்டுள்ளது.