Cauvery Issue : காவேரில் இருந்து தண்ணீர் திறந்துவிட முடியாது – கர்நாடக அரசு.! உச்சநீதிமன்றம் செல்வோம் – தமிழக அரசு.!

கர்நாடகா அரசு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கடந்த சில மாதங்களாகவே உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தர வேண்டிய குறிப்பிட்ட அளவு தண்ணீரை தராமல் இருந்து வருகிறது.

Karnataka CM Siddaramaiah - Tamilnadu Minister Durai Murugan

கர்நாடகா அரசு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கடந்த சில மாதங்களாகவே உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தர வேண்டிய குறிப்பிட்ட அளவு தண்ணீரை தராமல் இருந்து வருகிறது. இதனால் தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசு, காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றில் முறையிட்டு வருகிறது.

கடந்த 12ஆம் தேதி டெல்லியில் காவிரி ஒழுங்காற்று வாரியத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வீதம் காவிரியில் இருந்து கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என பரிந்துரை செய்து இருந்தது. இந்த பரிந்துரையை அடுத்து கர்நாடகா அரசு உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.

நேற்று பெங்களூரூவில் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்று மையத்தின் உத்தரவுபடி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும்,  இது குறித்து காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் முறையிட உள்ளதாகவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், கர்நாடகா அரசு கடந்த 13 ஆண்டுகளின் இல்லாத அளவுக்கு வறட்சியை கண்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக எங்களால் காவிரி ஒழுங்காற்று மைய உத்தரவுபடி தமிழகத்திற்கு 5000 கனஅடி நீர் திறந்து விட முடியாது. இது குறித்து சில நாட்களில் உச்ச நீதிமன்றத்திலும் காவிரி மேலாண்மை வாரியத்திலும் முறையிட உள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், காவிரி விவகாரம் வருகிற 21ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அதுவரையில் காவிரி ஒழுங்காற்று மையம் கூறியவாறு 5000 கனஅடி நீர் தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடுகிறதா என்று பார்க்கலாம். இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்தில் முறையிடலாம். இதனை விடுத்து இரு மாநிலம் பேச்சுவார்த்தை என்பது சரிவராது. உச்சநீதிமன்ற விசாரணைக்கு பின்னர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்கலாம் என்று செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.