லண்டனில் ஆதரவற்று நிற்கும் குழந்தைகளுக்கு உதவி செய்வோம்! உறுதியளித்த டாடா குழும தலைவர் சந்திரசேகரன்!
ஆதரவற்ற குழந்தைகளுக்கு உறுதுணையாக இருப்போம் என டாடா குழும தலைவர் சந்திரசேகரன் உறுதியளித்துள்ளார்.

மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) இந்தியாவை உலுக்கிய துயர சம்பவமாக உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர், தனது மனைவியின் சாம்பலை கரைப்பதற்காக லண்டனில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர். இவரது மறைவால், லண்டனில் 4 மற்றும் 8 வயதுடைய அவரது இரு குழந்தைகள் ஆதரவற்று நிற்கின்றனர். இந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, டாடா குழும தலைவர் நடராஜன் சந்திரசேகரன் உருக்கமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
“இந்தக் குழந்தைகளின் துயரமான நிலையை அறிந்தவுடன் மனம் உருகிவிட்டது. தாய், தந்தையை இழந்து லண்டனில் நிர்கதியாக நிற்கும் இந்த 4 மற்றும் 8 வயது குழந்தைகளை காக்க, டாடா குழுமம் ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்தும். பண உதவி மட்டுமல்ல, அவர்களுக்கு தேவையான கல்வி, உளவியல் ஆதரவு, மற்றும் வாழ்க்கைத் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவோம்,” என்று சந்திரசேகரன் மும்பையில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்தக் குழந்தைகளின் உறவினர்கள் இல்லாத நிலையில், டாடா குழுமம் அவர்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாவலரை நியமிக்கவும், லண்டனில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் ஒருங்கிணைந்து அவர்களின் நலனை உறுதி செய்யவும் திட்டமிட்டுள்ளது. மேலும், குழந்தைகளின் கல்வி செலவுகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக ஒரு நீண்டகால நிதி திட்டத்தை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா, டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் நிறுவனமாகும். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் குழந்தைகளுக்கு கூடுதல் ஆதரவு வழங்குவது குறித்து சந்திரசேகரன் வலியுறுத்தினார். “இந்தக் குழந்தைகள் எங்கள் பொறுப்பு. அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான, மகிழ்ச்சியான எதிர்காலத்தை உறுதி செய்வது எங்கள் கடமை,” என்று அவர் கூறினார்.