ஒடிசா ரயில் விபத்து: யார் இந்த 52 பேர்…ஒரு மாதம் ஆகியும் தீரா சோகம்..!

ஒடிசா ரயில் விபத்து சோகம் 1 மாதத்தை கடந்தும் அதன் தாக்கம் இன்னும் முடிந்தபாடில்லை.
இதுவரை இல்லாத மிக மோசமான விபத்தாக கூறப்படும் ஒடிசா ரயில் விபத்து நடந்து இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது. ஜூன் 2ல் , பஹானகா ரயில் நிலையத்தில் வேகமாக வந்த கோரமண்டல் ரயில், சரக்கு ரயில் மீது மோதியது. அதே சமயம், கோரமண்டல் பெட்டிகள், பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த யஸ்வந்த்பூர் ரயில் மீது மோதியதில், 2 ரயில்களிலும் பல பெட்டிகள் தடம் புரண்டன.

ஒட்டுமொத்த நாடும் உலகமும் திரும்பி பார்க்க வைத்த இந்த விபத்தில் 291 பேர் உயிரிழந்துள்ளனர், ஆயிரகணக்கானோர் காயமடைந்தனர். இன்றுடன் ஒரு மாதம் கடந்துவிட்டாலும், பயங்கரமான ரயில் விபத்து பற்றிய நினைவுகள் இன்னும் மனதில் நீங்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.

தீரா சோகம்:
விபத்தில் உயிரிழந்த 291 பேரில் 81 பேரின் உடல்கள் இன்னும் மருத்துவமனையில் தான் உள்ளது. இதில் 29 பேரின் உடல்களை அடையாளம் கண்டு குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இன்னும் 52 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத நிலை நீடித்து வருவது பெரும் வேதனை அளிக்கும் விஷயமாக உள்ளது.

சிபிஐ விசாரணை:
இந்த விபத்துக்குறித்து பலவித சந்தேகங்கள் ஏற்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிஐ ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பாலசோர் மாவட்டம் பஹானகா ரயில் நிலையத்தில் விசாரணையை தொடங்கியது.

விபத்துக்கான காரணம்:
இதில் முதற்கட்ட விசாரணையில் கணினி மூலம் இயங்கும் இந்த இண்டர்லாக்கிங் அமைப்பை, பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் நிலைய அதிகாரி அணைத்துவிட்டு, கிரீன் சிக்னல் கொடுத்ததால் இந்த பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது என்று என்று சிபிஐ தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 மூத்த அதிகாரிகள் இடமாற்றம்:
இந்த சம்பவம் நடந்து சில வாரங்களுக்குப் பிறகு தென்கிழக்கு ரயில்வேயின் ஐந்து மூத்த அதிகாரிகளை இந்திய ரயில்வே இடமாற்றம் செய்துள்ளது. இடமாற்ற உத்தரவுகளில் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டதற்கான எந்த காரணமும் குறிப்பிடப்படவில்லை.