மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு – உயர்நீதிமன்றம் கேள்வி...!

All India quota in medical courses - High Court question ...!

அகில இந்திய ஒதுக்கீடு இடங்களை மத்திய அரசுக்கு வழங்கிய நிலையில்,தமிழக அரசின் இட ஒதுக்கீடு எப்படி பொருந்தும்? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

எம்.பி.பி.எஸ், பல் மருத்துவம், மருத்துவ மேல்படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி,கடந்த ஆண்டு திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த இடஒதுக்கீடு வழக்கை முன்னதாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு,மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால்,இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு எந்தவித முடிவும் எடுக்கவில்லை என்று திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து, வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 69 சதவீத இட ஒதுக்கீடு எவ்வாறு அமல்படுத்தப்படும் என கேள்வி எழுப்பியது. மேலும்,இது தொடர்பாக மத்திய அரசு  விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உத்தரவு பிறப்பித்தது.

இதனைத் தொடர்ந்து,எம்.பி.பி.எஸ், பல் மருத்துவம், மருத்துவ மேல்படிப்புகள் போன்றவற்றுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதலே இந்த இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதில் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில்,திமுக சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது,அகில இந்திய ஒதுக்கீடு இடங்களை மத்திய அரசுக்கு வழங்கிய நிலையில்,தமிழக அரசின் இட ஒதுக்கீடு எப்படி பொருந்தும்? உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.மேலும்,இடங்கள் நிரப்பப்பட்டு மீண்டும் மாநில அரசுக்கு திரும்ப வழங்கினால் மட்டுமே  இட ஒதுக்கீட்டை பின்பற்ற முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து,அகில இந்திய இடஒதுக்கீட்டு இடங்களில் SC,ST போன்ற பட்டியலின பிரிவுக்கு மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை தமிழக அரசு பின்பற்றுகிறது.ஆனால்,ஓபிசி பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் மட்டும் மாநில அரசின் இடஒதுக்கீட்டையே பின்பற்ற படவேண்டும் என தமிழக அரசு கோருவது ஏன்? என்று மத்திய அரசு தரப்பில் கேள்வி எழுப்பபட்டது.

இதனையடுத்து,திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் மருத்துவப்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு உள்ளது என்று, எனவே அந்த உத்தரவை தான் அமல்படுத்த வேண்டும”,என்றும் தெரிவித்தார்.

இதனால்,நீதிபதிகள் இந்த வழக்கை ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.