சென்னை :தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நேற்று முடிச்சூரில் இந்திரா என்ற பெண் காவலர் தன்னுடைய பணியை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு திரும்பினார்.
இதனை கவனித்த மர்ம நபர் ஒருவர் அவரை பின்தொடர்ந்தார். உடனே சுதாரித்து கொண்ட பெண் காவலர் சந்தேகத்துடன் அந்த நபரை பார்த்தார். பிறகு அந்த நபர் வேகமாக நடந்து சென்றார். அதன்பிறகு இந்திரா தன்னுடைய வீட்டின் கதவை திறந்து கொண்டு இருந்தார். அப்போது இது தான் சரியான நேரம் என முடிவு செய்து அந்த நபர் இந்திரா கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்து சென்றார்.
இதைப்போல, ஒரே நாளில் மட்டும் மொத்தமாக 8 இடங்களில் இப்படியான சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியளிப்பதாக வருத்தம் தெரிவித்ததோடு அரசுக்கு எதிராக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட எட்டு இடங்களில், ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியையும், பொது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலர், சீருடையில் இருக்கும்போதே அவரது கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு சென்றிருக்கின்றனர்.
திமுக அரசு, சமூக வலைத்தளத்தில் இயங்கும் பாஜக தொண்டர்களைப் பின்தொடர்வதையே காவல்துறையின் முழுநேரப் பணியாக மாற்றியதன் விளைவு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பெண் காவலரிடமே செயின் பறிப்புச் சம்பவம் நடக்கும் அளவுக்கு, தமிழக மக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
திமுக அரசு, இனியும் காவல்துறையினரை, அரசியல் பழிவாங்குதலுக்குப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, சமூக விரோதிகளுக்கு எதிராக, காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும். காவல்துறையினரும், திமுகவின் அதிகார துஷ்பிரயோகங்களைப் புறக்கணித்துவிட்டு, தங்கள் முதற்கடமையான சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
unknown node