சென்னை மக்கள் கவனத்திற்கு: சுதந்திர தின விழா – போக்குவரத்து மாற்றம்.!

சென்னையில் நாளை மறுநாள் ஆகஸ்ட் 15 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, காலை 6 மணி முதல் 10 மணி வரை பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படும்.

Independence Day - road route

சென்னை :சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 15ம் தேதி) நடைபெறும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அன்றைய தினம் காலை 6 மணி முதல் 10 மணி வரை பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படும்.

அதன்படி, உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரையிலான காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரையிலான ராஜாஜி சாலை, மற்றும் கொடிமரச் சாலையில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்படும்.

இதனால், காமராஜர் சாலையில் ராஜாஜி சாலை வழியாக பாரிஸ் கார்னர் நோக்கிச் செல்ல விரும்பும் வாகனங்கள் வாலாஜா சாலையில் இடதுபுறம் திரும்பி அண்ணா சாலையில் இணைந்து, மன்றோ சிலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, இராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் என்.எஃப்.எஸ் (NFS) சாலை வழியாக பாரிஸ் கார்னரை அடையலாம். அதேபோல், அண்ணா சாலையிலிருந்து பாரிஸ் கார்னரை நோக்கி வரும் வாகனங்கள் மேலே உள்ள அதே பாதையை பயன்படுத்தலாம்.

ராஜாஜி சாலையில் இருந்து தலைமைச் செயலகம் வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள், பாரிஸ் கார்னர், என்.எஃப்.எஸ் சாலை, இராஜா அண்ணாமலை மன்றம். முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை, மன்றோ சிலை வழியாக அண்ணா சிலையில் இடதுபுறம் திரும்பி வாலாஜா சாலை நோக்கி சென்று காமராஜர் சாலையை அடையலாம்.

குறிப்பு:சிவப்பு மற்றும் ஊதா நிற பாஸ்கள் வழங்கப்பட்ட வாகனங்கள், காலை 8.30 மணிக்கு முன் சிவப்பு மற்றும் ஊதா நிற பாஸ்களுடன் வரும் வாகனங்கள், ராஜாஜி சாலையில் சென்று தலைமைச் செயலக நுழைவாயிலின் முன் விருந்தினர் இறங்கிய பின், வாகனமானது தலைமைச் செயலகத்திற்குள் நிறுத்த அனுமதிக்கப்படும்.