நாவலர் நெடுஞ்செழியன் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்!

The statue of former minister navalar nedunchezhiyan was unveiled by Chief Minister MK Stalin in Chennai.

முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியனின் சிலையை சென்னையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் உருவச் சிலையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நாவலர் நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் இடைக்கால முதலமைச்சராக நாவலர் நெடுஞ்செழியன் 3 முறை பதவி வகித்துள்ளார். அதிமுக அவைத்தலைவராகவும் இருந்துள்ளார். எனவே, நாவலர் நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மறைந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் உருவச் சிலையை முதல்வர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். நாட்டுடையாக்கப்பட்ட நெடுஞ்செழியனின் நூல்களுக்கான நூலுரிமை தொகை ரூ.20 லட்சத்தை முதல்வர் வழங்கினார். நீதிக்கட்சியின் வரலாறு, மொழிப்போராட்டம் உள்ளிட்ட எண்ணற்ற நூல்களை நாவலர் நெடுஞ்செழியன் எழுதியுள்ளார்.

1920-ல் தஞ்சை திருக்கண்ணபுரத்தில் பிறந்த நாவலர் நெடுஞ்செழியன், 2000-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி மறைந்தார். 1967 முதல் கல்வி, நிதித்துறை உணவு என பல்வேறு துறைகளின் அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடப்படுகிறது.