தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா...! கொரோனா பணியில் ஈடுபடும் எம்பிபிஎஸ் 3,4-ம் ஆண்டு பயிலும் மாணவர்கள்...!

MBBS 3rd and 4th year students who are involved in corona work in Tamil Nadu

தமிழகத்தில் கொரோனா பணிகளில் ஈடுபடும், எம்பிபிஎஸ் 3,4-ம் ஆண்டு படிக்கும்  மாணவர்கள்.

தமிழகத்தில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது.

இந்நிலையில், கொரோனா நோயாளிகளை கண்காணிக்க மருத்துவர்கள் பற்றாக்குறை காணப்படுகிறது. இதனை தொடர்ந்து, எம்பிபிஎஸ் பயிலும் 3,4-ம் ஆண்டு மாணவர்களை உரிய கண்காணிப்பின் கீழ், கொரோனா பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து, தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகம், 3 மற்றும் 4-ம் ஆண்டு முடித்த மருத்துவ மாணவர்கள் 7,000 பேரை கொரோனா பணிகளில்  ஈடுபடுத்துமாறு, அனைத்து மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளின் முதல்வர்களுக்கு சுற்றறிக்கை  அனுப்பியுள்ளது.

இதன்படி மருத்துவ மாணவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்குவர். மருத்துவமனைகளில் பணிகளை ஒருங்கிணைக்கும் செயல்களிலும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு முதல்கட்ட ஆலோசனைகளை வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுபட உள்ளார்கள். மேலும் மாணவர்கள் 7,000 பேரும் கொரோனா வார்டுகளில் நேரடியாக  பணியமர்த்தப்படமாட்டார்கள் என்று மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.