ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி வேலை நிறுத்தம்! காரணம் என்ன?

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டபடாததால் ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்.

strike Cylinder truck

சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், ஆகஸ்ட் 1, 2025 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் இந்த முடிவை அறிவித்துள்ளது, இதனால் தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டர் நிரப்பு மையங்களுக்கு (பாட்டிலிங் பிளாண்ட்) எல்பிஜி கேஸை கொண்டு செல்லும் லாரிகள், ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள சுங்கக் கட்டணத் தொகையை வழங்குவது, வாடகை உயர்வு, மற்றும் புதிய டெண்டர் விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால், இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று சங்கத் தலைவர் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.“நிலுவைத் தொகையை வழங்காததால், லாரி உரிமையாளர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வேறு வழியின்றி ஆகஸ்ட் 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்,” என்று சுந்தர்ராஜன் கூறினார். தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 5,500 எல்பிஜி டேங்கர் லாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், சென்னை, தண்டையார்பேட்டை, எண்ணூர், மற்றும் மற்ற பகுதிகளில் உள்ள பாட்டிலிங் பிளாண்டுகளுக்கு கேஸ் விநியோகம் பாதிக்கப்படலாம்.இந்த வேலை நிறுத்த அறிவிப்பு, தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் என்று பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர், மார்ச் 2025-ல் நடந்த நான்கு நாள் வேலை நிறுத்தம், பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது. தற்போது, இந்தியன் ஆயில் நிறுவனம் உடனடி பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாகவும், இந்தப் பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இருப்பினும், வேலை நிறுத்தம் தொடர்ந்தால், கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்