ஆகஸ்ட் 12 வரை விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட வழிபாட்டு தலங்களில் தரிசனத்திற்கு தடை!

In Virudhunagar and Ramanathapuram districts, the darshan of devotees at places of worship has been banned till August 12.

விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆகஸ்ட் 12 வரை வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆடிப்பெருக்கையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் விழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஆடி பெருக்குக்கு கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கோவில்களில் ஆடிப்பெருக்கு விழா பக்தர்கள் இன்றி நடைபெற்றுள்ளது.

குறிப்பாக விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆகஸ்ட் 12 வரை வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதர் ரெட்டி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் ஆகஸ்ட் 12 வரை பக்தர்கள் வழிபாடு முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது.

விலங்குகள் பலியிடுதல், திருவிழா நடத்துதல், ஜெபக் கூட்டங்கள், மசூதிகளில் தொழுகை, ஊர்வலங்கள், நேர்த்திக்கடன் செலுத்துதல் உட்பட்ட அனைத்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். மேலும், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சந்திரகலா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உட்பட ஏனைய கோவில்களில் இன்று முதல் ஆகஸ்ட் 12 வரை தரிசனத்துக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.