பிப்.22ம் தேதி தமிழகத்தில் திமுக ஆர்ப்பாட்டம் – முக ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு.!

The DMK has announced a protest on February 22 across Tamil Nadu condemning the increase in petrol and diesel prices.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பிப்ரவரி 22ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பிப்.22 ஆம் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக செயலாளர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். தினமும் பெட்ரோல், டீசல் விலை போட்டி போட்டு கொண்டு பந்தய குதிரை போல் எகிறுகின்ற இந்த நேரத்தில் சமையல் எரிவாயு விலையோ தாவிக்குதித்து செல்கிறது.

ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை ஒரு பொருட்டாகவே அரசு எண்ணவில்லை என கூறியுள்ளார். 2011-ல் திமுக ஆட்சியிலிருந்த போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 63.37 தான். டீசல் விலை ரூ.43.95 மட்டுமே, அந்த விலையை எதிர்த்து போராட்டம் நடத்திய அதிமுகவின் ஆட்சியில் இன்றைக்கு, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.91.19 மற்றும் டீசல் விலை ரூ.84.44 என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

முரட்டுத்தனமான இந்த விலை உயர்வு அனைத்துத் தரப்பு மக்களையும் மிரட்டிக் கொண்டிருக்கிறது. மத்திய பாஜக அரசு பெட்ரோல்,டீசல் மீது ரூ.20 லட்சம் கோடி கலால் வரி விதித்தது முதல் காரணம் என்றால், அதிமுக அரசு அதுவும் முதலமைச்சர் பழனிசாமி, கொரோனா காலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.3.25, டீசல் விலை ரூ.2.50 அதிகரிக்கும் வகையில் வாட் வரி விதித்தது இந்த விஷம் போன்ற விலை உயர்விற்கு மற்றொரு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.787.50க்கு கண்ணைக் கட்டும் அளவிற்கு உயர்த்தி சென்னை வந்த பிரதமர், தமிழக இல்லத்தரசிகளுக்கு ஒரு அதிர்ச்சிப் பரிசை அளித்து விட்டுச் சென்றிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. கடந்த  டிசம்பர் மாதத்தில், தலா ரூ.50 வீதம், இரு முறை ரூ.100 அதிகரிப்பு எனத் தாய்மார்களைக் கண்ணீர் சிந்த வைத்திருக்கும் மத்திய பாஜக அரசு, பெட்ரோல் டீசல் விலையையும் கண்மூடித்தனமாகச் செங்குத்தாக உயர்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.

unknown node