வெறிநாய் கடியால் பறிபோன உயிர்? கோவையில் தற்கொலை செய்துகொண்ட வடமாநில தொழிலாளி!
வெறிநாய் கடியால் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநில தொழிலாளி ராம்சந்தர், தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலரது ஒருமித்த குரலாக உள்ளது. இந்த தெருநாய் கடியின் மூலம் ஒரு நபர் தன் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் கோவை அரசு மருத்துவமனையிலேயே அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் இன்று காலை ஒடிசா மாநிலத்தை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளி ராம்சந்தர் எனும் நபர் வெறிநாய் கடி தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற வந்துள்ளார். அவருக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டதாக கூறபடுகிறது. இதனால் அவரை தனி வார்டில் வைத்துள்ளனர். அப்போது அந்த நபர் ரேபிஸ் பாதிப்பு காரணமாக மிக ஆக்ரோஷமாக நடந்து கொண்டார் என கூறப்படுகிறது.
இதனை அடுத்து, மருத்துவமனை தகவல் பலகையில் உள்ள கண்ணாடியை உடைத்து அதில் இருந்து கண்ணாடி துண்டை எடுத்து கழுத்து உள்ளிட்ட பகுதிகளை அறுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது . இதில் ரத்த்ம அதிகம் வெளியேறி அந்த நபர் உயிரிழந்து விட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ரேபிஸ் அறிகுறிகள் இருந்தாலும், அவர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாலும் அந்த நபரிடம் தகுந்த உபகரணங்கள் இன்றி நெருங்க முடியவில்லை என்றும், உபகரணங்களோடு நெருங்குவதற்குள் இத்துயர சம்பவம் நடைபெற்றுள்ளது என மருத்துவமனை தரப்பு தனியார் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது.