“பொறுப்புகள் கொடுக்குறது நீக்குறதுலாம் செல்லாது நான் இருக்கேன்” -அன்புமணி ராமதாஸ் அதிரடி!
முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் நான் கட்சியில் விதிகள் எல்லாம் இருக்கு என மீண்டும் மீண்டும் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் விதமாக அன்புமணி பேசியுள்ளார்.

சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்துள்ளது. ஒரு பக்கம் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி கட்சித் தலைவர் தானே எனவும் கூறி வருகிறார்.
மற்றொரு பக்கம் கட்சியின் தலைவர் அன்புமணி சென்னை சோழிங்கநல்லூரில் பாமக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் அதே பதவியில் நியமித்து, பொதுக்குழுவால் தலைவராக தேர்வு செய்யப்பட்டது நானே? எனவே நான் சொல்வது தான் செல்லும் என கூறி வருகிறார். ஏற்கனவே, நேற்று நடைபெற்ற முதல் நாள் கூட்டத்தில் அவர் இந்த விஷயத்தை தெளிவாக கூறி தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.
அதனைத்தொடர்ந்து பாமக நிர்வாகிகள் உடனான 2-ம் நாள் ஆலோசனை கூட்டத்தில் உரையாடியபோதும் மீண்டும் இதனைக்கூறி தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” பொறுப்புகள் கொடுக்குறது, நீக்குறதுலாம் செல்லாது. நான் இருக்கேன். அடுத்த 10 நிமிடத்தில் என்னோட லெட்டர் வந்துரும்.
கட்சியில் விதிகள் எல்லாம் இருக்கு. தலைவர்தான் கையெழுத்து போடணும். அவர்தான் எல்லாமே நியமனம் பண்ணனும். எனவே பொதுக்குழுவால் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்றால் அது நான். நான் சொன்னால் தான் செல்லும். இந்த மாதிரி குழப்பங்களை பார்த்து நீங்கள் எதுவும் யோசிக்கவேண்டாம். குழப்பங்கள் எல்லாம் சரியாகிடும். நான் இந்த அணைத்து குழப்பங்களையும் சரி செய்துவிடுவேன்” எனவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இவர் பேசிய சில மணி நேரங்களில் பாமக இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளராக கி.லோகநாதன் நியமனம் என ராமதாஸ் அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அவரை தொடர்ந்து அன்புமணி இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளராக உள்ள க.சரவணனே அப்பொறுப்பில் தொடர்வார் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.