4 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை., கருப்பு கொடிகளை கட்டி கிராம மக்கள் போராட்டம்!

Struggle to build black flags on houses near Vilathikulam as no basic amenities have been provided for the last 4 years.

கடந்த 4 ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என விளாத்திகுளம் அருகே வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டம்.

கோவில்பட்டி, விளாத்திகுளம் அருகே கமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட துரைராஜ் நகர் பகுதியில் 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி சார்பில் கடந்த 4 ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக குடிநீர் வசதி செய்து தரவில்லை என்பதால் அப்பகுதி மக்கள் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்று குடிநீர் எடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மனு அளித்தும் குடிநீர் இணைப்பு வழங்க ஊராட்சி நிர்வாகம் மறுத்து வருவதாகவும், சாலை வசதி, மின்விளக்கு என அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என மக்கள் புகார் அளித்து வருகின்றனர். இந்த நிலையில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கி சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த விளாத்திகுளம் போலீசார், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கருப்பு கொடிகளை அகற்ற வலியுறுத்தினார். இதனைத்தொடர்ந்து விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை தொடர்பு கொண்டும் பேசினார். அப்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன், உரிய அனுமதி பெற்று அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கிராம மக்கள் தங்கள்து போராட்டத்தை ஒத்திவைத்தனர். இதனிடையே தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், புதிய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த கூடாது என்றும் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களை செயல்படுத்தலாம் எனவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. மேலும், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, அடிப்படை வசதி இல்லாத சில பகுதிகளில் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரும்படி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.