கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல மாநிலங்களில் மக்கள் கூடும் ஜிம் , திரையரங்கம் , போன்ற இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.மேலும் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தொடர்ந்து முக கவசம், கையை சுத்தப்படுத்தும் சானிடைசர்கள் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் ஜூன் 30-ம் தேதி வரை அத்தியாவசிய பொருள் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் மூலம் முகக் கவசம் , சானிடைசர்களை பதுக்குவதோ அல்லது கள்ளச்சந்தையில் விற்பதோ சட்டப்படி குற்றமாகும். மீறினால் 7 வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் முககவசம், கிருமி நாசினி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பலர் புகார் எழுந்த நிலையில் அதை தடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நூலகர் ராஜேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முககவசம், கிருமி நாசினி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.? என்ற கேள்வியை எழுப்பியது.மேலும் இது குறித்து தமிழக அரசு நாளை மறுநாள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.