கருணை மூலம் எனக்கு கிடைத்து வாய்ப்பு - ராஜ்யசபா வேட்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி!

முதலமைச்சர் விஜய்யின் பெருந்தன்மை மற்றும் அவரது கருணையால் எனக்கு ராஜ்யசபா சீட் கிடைத்துள்ளது என பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி, தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகளை மாநிலங்களவையில் வலுவாக எடுத்துச் செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராஜ்யசபா இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதை மிகப்பெரிய பொறுப்பாகவும், பெருமையாகவும் கருதுகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் என்னை ஆதரித்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

மேலும், “தமிழ்நாட்டின் உரிமைகள், தேவைகள் மற்றும் மக்களின் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தின் மேலவையான ராஜ்யசபாவில் தொடர்ந்து வலியுறுத்துவேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், மாநில நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காகவும் உறுதியான குரலாக செயல்படுவேன்” என்று கூறினார்.

அத்துடன், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் காங்கிரஸ் - தமிழக வெற்றிக் கழக கூட்டணி அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளையும் நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால், மாநில உரிமைகள், நிதி ஒதுக்கீடு, நீர்வள பிரச்சினைகள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதே தனது முதன்மை நோக்கமாக இருக்கும் என்றும் பிரவீன் சக்ரவர்த்தி கூறினார்.

கருணை மூலம் எனக்கு கிடைத்து வாய்ப்பு - ராஜ்யசபா வேட்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி!