என் அம்மா மீது சிறு துரும்பும் பட விட மாட்டேன் – பாமக தலைவர் அன்புமணி பேச்சு!
தாயின் மீதே பாட்டிலை எறிந்து தாக்க முயன்றவர் அன்புமணி என ராமதாஸ் கூறியிருந்த நிலையில், கட்சி நிர்வாகிகளிடையே அன்புமணி ராமதாஸ் அதற்கு விளக்கம் அளித்து பேசியிருக்கிறார்.

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது தந்தையும் கட்சியின் நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து, தனது தாய் சரஸ்வதி மீது எந்தத் தவறும் செய்யவில்லை என்று உறுதியாகக் கூறியுள்ளார்.
நேற்று விழுப்புரம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்,அன்புமணி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.“50 ஆண்டுகளாக கட்சியை வளர்த்தேன், ஆனால் அன்புமணி ஒரு நொடியில் அதை உடைத்துவிட்டார்,” என குற்றம் சாட்டினார்.
அது மட்டுமின்றி வளர்த்த கடா மார்பில் எட்டி உதைப்பதுபோல் அன்புமணி உதைத்துவிட்டார், தன் தாயின் மீதே பாட்டிலை தூக்கி அடித்தவர் அன்புமணி ” எனவும் வெளிப்படையாகவே பேசினார்.எனவே, பாமக விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது.
இப்படியான சூழலில் தந்தை வைத்த விமர்சனங்களுக்கு அன்புமணி இன்று சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் விளக்கம் அளிக்கும் வகையில் பேசியுள்ளார். இந்தக் கூட்டத்தில், கலந்து கொண்ட அன்புமணி தனது தந்தை ராமதாஸ், “அன்புமணி தனது தாய் மீது பாட்டிலை எறிந்து தாக்க முயன்றார்” என்று குற்றம்சாட்டியதற்கு பதிலளிக்கும் விதமாக “என் அம்மா மீது சிறு துரும்பும் பட விடமாட்டேன், இந்த உலகிலேயே எனக்கு மிகவும் பிடித்தவர் என் அம்மாதான்” என்று உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்தார்.
அதைப்போல, தனது தந்தையின் குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும், அவை கட்சியினரையும் பொதுமக்களையும் திசைதிருப்பும் முயற்சியாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார். மேலும், “எனது தாயை நான் மிகவும் மதிக்கிறேன், அவர் மீது எந்தவித தவறும் செய்யவில்லை. என் வாழ்க்கையில் அவருக்கு முதல் இடம் உண்டு” என்று வலியுறுத்தினார். கட்சியின் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக தான் தொடர்ந்து செயல்படுவேன் என்றும் அன்புமணி திட்டவட்டமாக தெரிவித்தார்.