“நிர்வாகிகளை மாற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை”…ராமதாஸ் செயலுக்கு பதில் அளித்த அன்புமணி!
பொதுக்குழுவில் தேர்வான நிர்வாகிகளை நீக்க முடியாது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. அதற்கு காரணம் பாமக நிறுவனர் “தவறான ஆட்டத்தை துவங்கி வைத்த அன்புமணி, பொதுக்குழு மேடையில் என் தலை மீது மைக்கை போடாததுதான் குறை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியதோடு, வளர்த்த கடா மார்பில் எட்டி உதைப்பதுபோல் அன்புமணி உதைத்துவிட்டார், தன் தாயின் மீதே பாட்டிலை தூக்கி அடித்தவர் அன்புமணி” என வெளிப்படையாகவே விமர்சனம் செய்து பேசியிருந்தார்.
இப்படியான சூழலில், பாமக விவகாரம் இருக்கும் நிலையில், இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை சோழிங்கநல்லூரில் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனையின் போது “பாமக யாருடைய தனி சொத்தும் அல்ல” என்று குறிப்பிட்டு, கட்சி ஒரு ஜனநாயக அமைப்பாக செயல்படுவதாகவும், பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தானே என்றும் தெரிவித்தார்.
அது மட்டுமின்றி பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை நீக்குவதற்கு எந்தவொரு தனிநபருக்கும் அதிகாரம் இல்லை என்பதை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். இது பற்றி பேசிய அவர் ” பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட தலைவர், பொருளாளரை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை பொதுக்குழுவின் முடிவு தேர்தல் ஆணையத்தால் ஏற்கப்பட்டது.
சட்ட விதிகளின் படி பொதுக்குழுவிற்கு மட்டுமே அதிகாரம் சின்ன மாற்றத்தை கூட செய்ய முடியாது நான் இருக்கிறேன். நமக்குள் குழப்பம் வேண்டாம், யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம், நிர்வாகிகள் தொடர்வார்கள்” எனவும் அன்புமணி தெரிவித்தார்.
மேலும், பாமகவின் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் மயிலம் சிவகுமாரை கட்சியின் நிறுவனரான ராமதாஸ் பொறுப்பில் இருந்து இன்று நீக்கினார். அவருக்கு மாற்றாக புகழேந்தி நியமனம் செய்யப்பட்டதாகவும் அறிவித்திருந்தார். அவருடைய இந்த செயலுக்கு பதில் அளிக்கும் விதமாக அன்புமணி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட தலைவர், பொருளாளரை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை” என தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.