”பாமக-விற்கு துரோகம் செய்தால் அது என் வாழ்நாளில் கடைசி நாளாக இருக்கும்” – அன்புமணி.!
பாமகவில் சில சூழ்ச்சிக்காரர்கள் இருக்கிறார்கள், அவர்கள் யார் என்பது விரைவில் தெரியவரும் என்று பாமக தலைவர் அன்புமணி பரபரப்பாக பேசியிருக்கிறார்.

காஞ்சிபுரம் : பாமக கட்சிக்குள் தலைவர் பதவி தொடர்பாக 2 பேருக்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு நிலவுகிறது. நேற்றைய தினம் திருவள்ளூரில் நடந்த பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி, ”தந்தையாக ராமதாஸ் அவர்கள் ஆணையிட்டால் மகனாக தலைவராக அவற்றை செய்வதற்கு காத்திருக்கிறேன்.
நீங்கள் நூறு ஆண்டுகள் மகிழ்ச்சியிடன் உடல் நலத்தோடு வாழ வேண்டும் என்றும், தங்களுக்கு பிபி இருப்பதால் டென்ஷனாக வேண்டாம் என பாமக தலைவர் அன்புமணி தனது தந்தைக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில், இன்றைய தினம், காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.
அப்போது அவர் மேடையில் பேசுகையில், ”பா.ம.க.விற்கு துரோகம் செய்தால் அது என் வாழ்நாளில் கடைசி நாளாக இருக்கும். பா.ம.க.வில் சில சூழ்ச்சியாளர்கள் இருக்கிறார்கள், சில நாட்களில் அவர்கள் யார் என்பது தெரியவரும்.
அமைதியாக இருப்பது எனது பலம், கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் துணிச்சலும் திட்டமும் என்னிடம் உள்ளது. நான் எந்த தவறும் செய்யவில்லை, இருப்பினும் எனது அப்பாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளேன். தி.மு.க. தான் பா.ம.க.வின் எதிரி, நமக்குள் பிரச்சனை வேண்டாம்” என்று கூறியிருக்கிறார்.