ஜல்லிக்கட்டு 2025 : மாடு பிடி வீரர் கார்த்திக் தகுதி நீக்கம்!

மாடுபிடி வீரர் கார்த்திக் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிலும் பங்கேற்ற நிலையில் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2025 jallikattu Competition

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் அருகே உள்ள ஜல்லிக்கட்டு திடலில் நடைபெற்ற போட்டியில் 1,100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

இதில், கடந்த ஆண்டு நடைபெற்றஅவனியாபுரம்ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு 18 காளைகளை அடக்கி முதலிடத்தை பிடித்தார் வீரர்கார்த்திக் இந்த ஆண்டும் களத்தில் இறங்கி விளையாடினார். நேற்று 4 சுற்றுகள் முடிந்தபோதே 8 காளைகளை அடக்கி முன்னிலை வகித்தார். இருப்பினும், அவரால் இந்த முறை வெற்றிபெறமுடியவில்லை.

நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திக் முதல் பரிசான 8 லட்சம் மதிப்புக்கொண்ட காரை பெற்றுக்கொண்டார். அவருக்கு அடுத்தபடியாக, குன்னத்தூரைச் சேர்ந்த அரவிந்த் திவாகர் 15 காளைகளை அடக்கி இரண்டாவது இடத்தை பிடித்தார்.

இந்த சூழலில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் விளையாடிய வீரர் கார்த்திக் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனென்றால், அவனியாபுரம்  போட்டியில் கலந்து கொண்டு விளையாடியது மட்டுமின்றி அலங்காநல்லூர் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டிலும் பங்கேற்ற நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.

விதிமுறைகளின் படி, ஏற்கனவே ஒரு போட்டியில் களம் கண்ட வீரர் மற்றோரு போட்டியில் கலந்து கொண்டு விளையாட கூடாது. எனவே, அந்த விதிமுறையை கார்த்திக் மீறிய காரணத்தால் அவரை தகுதிநீக்கம் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.