"சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது" – ஆளுநருக்கு உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

அண்ணா வழியில் நடைபோடும் நம் தலைவர் அவர்களுக்கு, ‘கண்ணியம்’ குறித்து ஆளுநர் பாடமெடுக்கத் தேவையில்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Udhayanithi Stalin - RN Ravi

சென்னை :இந்தி மாதம் நிறைவுக் கொண்டாட்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியவர்கள் ‘தெக்கணமும் அதிர்ச்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரிகளை விட்டுவிட்டு பாடிய சம்பவம் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்ப்ட பலர் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும், மக்களின் உணர்வுகளை தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை வைத்தும் வருகின்றனர். இந்த நிலையில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது.

வரிகளை நீக்கினால் ‘திராவிடம்’ வீழாது எனவும் ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க நினைக்கும் அவரை, ஒன்றிய அரசு உடனேத் திரும்பப்பெற வேண்டும் எனவும், இந்த விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்து காட்டமாக அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள அந்த எக்ஸ் பக்க பதிவில், “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்தை நடைமுறைப்படுத்திய போது, குறிப்பிட்ட பிரிவினரின் மனம் புண்படாத வண்ணம் சில வரிகளை நீக்கினார்கள்.

ஆனால் இன்றைக்கு, ஆளுநர் பங்கேற்போடு நடைபெற்ற ‘டிடி தமிழ்’ இந்திக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடே கொதித்தெழும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து ‘திராவிடநல் திருநாடு’ எனும் வரியை நீக்கியிருக்கிறார்கள்.

யாரும் புண்பட்டுவிடக்கூடாது என்பது திராவிடம். மற்றோரைப் புண்படுத்தி மகிழ்வது ஆரியம். இதற்கு மேலும் ஓர் உதாரணமே இச்சம்பவம். சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது, வரிகளை நீக்கினால் ‘திராவிடம்’ வீழாது.

இதைப் புரிந்து கொள்ளாத ஆரியநர், அண்ணா வழியில் நடைபோடும் நம் தலைவர் அவர்களுக்கு, ‘கண்ணியம்’ குறித்துப் பாடமெடுக்கத் தேவையில்லை. ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க நினைக்கும் அவரை, ஒன்றிய அரசு உடனேத் திரும்பப்பெற வேண்டும்”, என உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

unknown node