மெகா தடுப்பூசி முகாம்! 14,29,736 பேருக்கு தடுப்பூசி – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Minister Ma Subramaniam said that 14,29,736 people have been vaccinated through the 19th mega vaccination camp in Tamil Nadu today.

தமிழகம் முழுவதும் இன்று 19-வது மெகா தடுப்பூசி முகாம் மூலம் 14,29,736 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மாநிலம் முழுவதும் தடுப்பூசியை அதிகரிக்க மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 19-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசி முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 14,29,736 பேர் செலுத்தியுள்ளனர் என்று தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை தமிழகத்தில் 9 கோடியே 31 லட்சத்து 3,288 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 9.05 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுள்ளது. 15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்கள் 25.66 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்று தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 89.6% பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 66.8% பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. 2.17 லட்சம் பேருக்கு இதுவரை பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று மட்டும் 33,129 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியோர் சரியான நேரத்தில் 2ம் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும முதல் தவணை தடுப்பூசி செலுத்தியோர் உடலில் 6 மாதத்திற்கு பின் நோய்எதிர்ப்பு சக்தி குறைவதால் தாமதிக்கக்கூடாது எனவும் கூறினார். மேலும், அனைத்து வகை கொரோனா தொற்றுக்கும், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை உண்டு என்றும் குறிப்பிட்டார்.