"மு.க. ஸ்டாலின் ஒரு போதும் தமிழகத்தின் முதல்வராக முடியாது"- மு.க.அழகிரி!

Speaking in Madurai, MK Alagiri said that Stalin could never be the CM of Tamil Nadu and his supporters would not let him be the CM.

மு.க. ஸ்டாலின் ஒருபோதும் தமிழகத்தின் முதல்வராக முடியாது எனவும், என்னுடைய ஆதரவாளர்கள் முதல்வராக்கவும் விடமாட்டார்கள் என மதுரையில் பேசிய மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே, இன்று வருங்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆதரவாளர்களுடன் மதுரையில் ஆலோசனை நடத்தி நடத்தினர், மு.க.அழகிரி. மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் பேசுவதற்காக அழகிரி மேடைக்கு வந்தார். அப்பொழுது மேடைக்கு கூட்டத்தினரை அமைதியாய் அமர சொல்லிவிட்டு, அருகே இருக்கும் அறைக்கு சென்றுவிட்டார். அதன்பின் பேசத்தொடங்கிய அவர், கலைஞரிடம் பொய் சொல்லி என்னை திமுகவில் இருந்து பிரித்துவிட்டார்கள் எனவும், கலைஞர் இல்லாததை சொல்லி என்னை கட்சியை விட்டு நீக்கிவிட்டார்கள் என குற்றம் சாட்டினார்கள். திருமங்கலம் தேர்தலில் நான் வேலை பார்க்க வேண்டும் என்று கலைஞரும் இப்போதைய திமுக தலைவராக இருக்கும் ஸ்டாலினும் என்னிடம் மன்றாடினார்கள் என கூறினார்.

திருமங்கலம் இடைத்தேர்தலை பார்முலா என்கிறார்கள். அந்த பார்முலா உழைப்புதான், பணமில்லை என்றும், திருமங்கலம் தேர்தல் வெற்றி பெற்றுக்கொடுத்ததற்காக என்னை வரவேற்க வெறும் 10 பேரை அனுப்பினார்கள். அது இன்றைய தலைவர் செய்த சதி என தெரிவித்த அவர், பல வெற்றிகளை திமுகவிற்கு பெற்று கொடுத்தது தான் நான் செய்த துரோகமா? என்று கேள்வியெழுப்பினார்.

மேலும், மு.க.ஸ்டாலினுக்கு திமுகவில் பொருளாளர் பதவி பெற்றுக்கொடுத்ததே நான் தான் நான் என தெரிவித்த அவர், பொய் சொல்லி பழக்கப்பட்டவன் அல்ல எனவும், கலைஞருக்கு பிறகு ஸ்டாலின் தான் திமுகவின் தலைவர், முதல்வர் என அவரிடமே சொன்னேன் இதை மறுக்க முடியுமா ஸ்டாலின்? என்றும், அவரது மனசாட்சிக்கு தெரியும் பின்னர் ஏன் எனக்கு ஸ்டாலின் துரோகம் செய்தார் என தெரியவில்லை நான் என்ன தவறு செய்தேன்? எனவும் கேள்வியெழுப்பினார்.

2014-ல் கலைஞரை சந்தித்து, என்னை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வீர்களா?என்று கேட்டேன். அதற்கு அவர், இவர்கள் ஆட்டம் எல்லாம் தொடங்கட்டும் என்று கலைஞர் சொன்னார். ஆனால் அதற்குள் இறந்துவிட்டார். எந்நாளும் வருங்கால முதல்வரே என போஸ்டர் ஒட்டிக்கொண்டே இருக்க வேண்டியதுதான் என கூறிய மு.க. அழகிரி,மு.க. ஸ்டாலின் ஒருபோதும் தமிழகத்தின் முதல்வராக முடியாது எனவும்,என்னுடைய ஆதரவாளர்கள் முதல்வராக்கவும் விடமாட்டார்கள்.

நான் முடிவு எடுப்பேன். எதற்கும் தயாராக இருங்கள். அது நல்ல முடிவோ, அல்லது கெட்ட முடிவோ, எந்த முடிவு எடுத்தாலும் நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த மு.க.அழகிரி, திமுகவினருக்கு எத்தனையோ நல்லது செய்திருக்கிறேன், எத்தனையோ பேரை அமைச்சர் ஆக்கியிருக்கிறேன் ஆனால் எவனுக்கும் நன்றி கிடையாது என்று தெரிவித்துள்ளார்.