பதிவு செய்யப்பட்ட சொத்துக்கள் வருமானவரித்துறை இணையத்தில் பதிவேற்றக்கோரி செங்குன்றம் – உறையூர் பகுதி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு உத்தரவு.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், திருச்சி மாவட்டம் உறையூர் ஆகிய சார் பதிவாளர் அலுவலகங்களில் வருமானவரித்துறை புலனாய்வு பிரிவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதில் சுமார் 3000 கோடி மதிப்பிலான பதிவு செய்யப்பட்ட சொத்துக்களின் விவரங்களை வருமான வரித்துறை கணக்குகளில் பதிவேற்றாமல் இருந்தது தெரிய வந்துள்ளது.
அதாவது குறிப்பிட்ட மதிப்பிற்கு மேல், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்துக்களை ஒருவர் வாங்கும்போது அதனை பதிவு செய்யும் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட விவரங்கள், சொத்து மதிப்பு உள்ளிட்ட விவரங்களை வருமானவரித்துறை கணக்கில் இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இந்த பதிவேற்றமானது குறிப்பிட்ட கால இடைவெளியில் தோராயமாக ஒரு வருட இடைவெளிக்குள் அந்த சொத்துக்கள் பற்றிய விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம் யார் எவ்வளவு சொத்து வாங்குகிறார்கள், அவர்களின் வருமானத்துக்கு தகுந்தபடி சொத்துக்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து வருமானவரித்துறை ஆய்வு செய்ய ஏதுவாக இருக்கும்.
ஆனால், மேற்கண்ட செங்குன்றம் மற்றும் உறையூர் பகுதி வருமான சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவேற்றம் செய்ய தவறிய காரணத்தால் தற்போது வருமானவரித்துறையின் புலனாய்வு பிரிவு சோதனை செய்தனர். தற்போது சொத்துக்களை பதிவேற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனை குறிப்பிட கால இடைவெளியில் பதிவேற்றம் செய்ய தவறினால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
