பயன்படுத்தப்பட்ட காவல்துறை வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளது என காவல்துறை தலைமை அலுவலகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 35 நான்கு சக்கர வாகனங்கள், 7 இரு சக்கர வாகனங்களை ஏலம் விடுவது குறித்த அறிவிப்பை காவல்துறை தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில், காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகம், சென்னை, மாநிலக் குற்ற ஆவணக் காப்பகம் மற்றும் தொழில்நுட்பப்பிரிவில் காவல் துறையினரால் பயன்படுத்தப்பட்ட 42 வாகனங்கள் (35 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 7 இரண்டு சக்கர வாகனங்கள்) வரும் 2ம் தேதி அன்று காலை 11.30 மணிக்கு மயிலாப்பூர் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில், திறந்த நிலை ஏலம் மற்றும் மூடிய நிலை ஏலத்தில் விடப்படுகிறது.
அதிமுக – பாஜக கூட்டணி பிளவு என்பது போலியான நாடகம் – திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ
ஏலம் எடுக்க விரும்புவோர் 1-ஆம் தேதி மாலை 5 மணி வரை வாகனங்களை பார்வையிட அனுமதிக்கப்படுவர். காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகவளாகத்தில் ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் வரும் 2-ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 11:15 மணிக்குள் ஏலம் விடும் இடத்தில் முன் பணமாக ரூ.1000 செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். முன் பணத்தொகை செலுத்தும் நபர்கள் மட்டுமே ஏலத்தில்கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாகனத்தை ஏலம் எடுத்தவுடன், அதற்கான ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) முழுவதையும் துறையில் ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். முகவரியுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டை (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம்) நகலை ஏலத்திற்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
