கல்வி கட்டணம் செலுத்தாததால் 5- ஆம் வகுப்பு மாணவர்கள் 13 பேரை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கிய தனியார் பள்ளி!

Parents have blamed a private school in Dindigul for expelling 13 students from online classes for non-payment of tuition fees.

திண்டுக்கல்லில் கல்விக் கட்டணம் செலுத்தாத காரணத்தால் 13 மாணவர்களை  ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கிய தனியார் பள்ளி மீது பெற்றோர்கள் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.

கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதிலும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸின் தாக்கம் தற்போதும் குறையாத நிலையில், பள்ளிகள், கல்லூரிகள் தொழிற்சாலைகள் அனைத்தும் ஒரு வருடத்திற்கு மேலாக மூடப்பட்ட நிலையில் உள்ளது. இருப்பினும், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாலையில் இயங்கி  வரக்கூடிய சௌந்தர ராஜா வித்யாலயா எனும் சிபிஎஸ்இ தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது.இந்த பருவத்திற்கான கல்வி கட்டணமாக 27 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என சௌந்தர ராஜா பள்ளி நிர்வாகம் சார்பில் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. இருப்பினும் ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாததால் பெற்றோர்கள் கல்வி கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் கோரியுள்ளனர்.

இருப்பினும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்காத தனியார் பள்ளி, கட்டணம் செலுத்தாத ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் 13 பேரை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கியுள்ளது. இதனையடுத்து இந்த தனியார் பள்ளி மீது பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளதுடன், பள்ளியே செயல்படாத நிலையில் பேருந்து கட்டணம், விளையாட்டு கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு சேர்த்து பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.