ஆர்.டி.பி.சி.ஆர். கருவிகள் கையாண்டதில் முறைகேடு....? ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Chennai High Court has directed the Tamil Nadu Medical Secretary to investigate whether there was any malpractice in the handling of RTPCR equipment at Chengalpattu Government Hospital.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆர்டிபிசிஆர் கருவிகள் கையாண்டதில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய தமிழக மருத்துவத் துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோன பரிசோதனைக்காக 64 கோடி ரூபாய் செலவில் ஆர்டிபிசிஆர் கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலமாக நாள் ஒன்றுக்கு 1500 முதல் 2000 மாதிரிகள் வரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கருவியில் நான்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும் நிலையில், ஒரு கருவி மூலம் ஒரு மாதிரி மட்டுமே எடுக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டதாக கோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சி.முத்துக்குமார் அவர்கள் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

மேலும் இது குறித்து குறிப்பிட்டுள்ள அவர், இதனால் 5 கோடி ரூபாய் அளவிளான கருவிகள் காலாவதி ஆகி விட்டதாகவும், அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். தற்பொழுது இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது.

அப்பொழுது கொரோனா பரிசோதனை கருவிகள் கையாண்டதில் முறைகேடுகள் இருப்பது பேராபத்து எனவும், மருத்துவத் துறை செயலாளர் உடனடியாக இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த ஆய்வில் முறைகேடுகள் அல்லது குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டு இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.