ராமதாஸ் ரெடியா இருக்காரு…அடுத்து அன்புமணியிடம் பேச வேண்டும் -ஜி.கே.மணி!
சற்று இறங்கி வந்து சரி பார்க்கலாம் என்ற இடத்திற்கு ராமதாஸ் வந்துள்ளார் என பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்துள்ளது. ஒரு பக்கம் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி கட்சித் தலைவர் தானே எனவும் கூறி வருகிறார்.
மற்றொரு பக்கம் கட்சியின் தலைவர் அன்புமணி சென்னை சோழிங்கநல்லூரில் பாமக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் அதே பதவியில் நியமித்து, பொதுக்குழுவால் தலைவராக தேர்வு செய்யப்பட்டது நானே? எனவே நான் சொல்வது தான் செல்லும் என கூறி வருகிறார்.
இந்த நிலையில், பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான பிரச்சனை குறித்து பேசினார். இது குறித்து அவர் பேசியதாவது ” ராமதாஸ்-அன்புமணி சந்திக்க வேண்டும் என்பது எனது ஆசை மட்டுமல்ல, கட்சியில் உள்ள ஒவ்வொரு பொறுப்பாளர் மற்றும் தொண்டரின் விருப்பமும் இதுவே. இப்போது இருவருக்கும் இடையே நடக்கும் இந்த பிரச்னையை பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது.
ஆனால், இது விரைவில் சரியாகிவிடும் என நான் நம்புகிறேன். ராமதாஸ் மற்றும் அன்புமணி விரைவில் சந்தித்து, கட்சியின் எதிர்காலத்திற்காக ஒரு நல்ல முடிவை எடுப்பார்கள். இதற்காக நான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன். ராமதாஸ்-அன்புமணி சந்திக்க வேண்டும் என்பது எனது ஆசை மட்டுமல்ல, கட்சியில் உள்ள ஒவ்வொரு பொறுப்பாளர் மற்றும் தொண்டரின் விருப்பமும் அது தான்.
இந்தப் பிரச்சனை குறித்து அன்புமணியுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், அவரை நேரில் சந்திக்க முயற்சித்ததாகவும் கூறினார். “நான் நேரில் வந்து சந்திக்கிறேன் என்று அன்புமணியிடம் சொன்னேன். ஆனால், அவர் ‘போனில் பேசுங்கள்’ என்றார். கட்சிக்குள் நடக்கும் பேச்சுவார்த்தைகளை வெளியே சொல்ல விரும்பவில்லை, எனவும் அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து ” இரு தலைவர்களும் ஒருவரையொருவர் சந்தித்து, கட்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். இது பற்றி அவர் பேசியதாவது ” ராமதாஸ் சற்று இறங்கி வந்து சரி பார்க்கலாம் என்ற இடத்திற்கு வந்துள்ளார். இப்போது அன்புமணியிடம் பேச வேண்டும். அவர்கள் இருவரும் விரைவில் சந்தித்து ஒரு நல்ல முடிவை அறிவிப்பார்கள் என்று நம்புகிறேன்” எனவும் ஜிகே மணி பேசினார்.