திருநெல்வேலி:மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை (டிச,13) தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (டிச, 13) அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் முக்கிய அறிவிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், ” மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி அருகில் நீர்வரத்து அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார். தற்போது திருநெல்வேலி மாவட்ட அணைகளில் இருந்து சுமார் 800 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ள போதிலும் திருநெல்வேலி மாநகரப் பகுதிக்குள் தற்போது வரும் நீரின் அளவு சுமார் 65 ஆயிரம் கன அடி அளவிற்கு உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மேலும் கனமழை தொடர்ந்தால் இது படிப்படியாக அதிகரித்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் செல்லக்கூடும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி எச்சரித்துள்ளார்.தாமிரபரணி ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் மற்றும் நீர் நிலைகளின் அருகில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அல்லது அரசு முகாம்களுக்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறு” அறிவுறுத்தியுள்ளார்.
unknown node