பறக்கும் ட்ரோன் கேமிரா மூலம் ஊரடங்கை மீறி கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களை விரட்டியடித்த விடியோவை சேலம் காவல்துறையினர் வெளியிட்டனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும்போது சேலம் நகர இளைஞர்கள் மலையடிவாரத்தில் கிரிக்கெட் விளையாடினர். அதனை பறக்கும் ட்ரோன் ரக கேமிரா மூலம் போலீசார் கண்டறிந்து, அந்த பறக்கும் கேமிரா கொண்டே அந்த இளைஞர்களை போலீசார் கதறவிடுகின்றனர்.
கேமிரா கண்டவுடன் இளைஞர்கள் தெறித்து ஓடுகின்றனர். ஒரு இளைஞர் தனது லுங்கியால் உடல் முழுக்க மறைந்து இருக்கிறார். கேமிரா தன் அருகில் வருவதை கண்டவுடன் துள்ளியடித்து ஓட்டம் பிடிக்கிறார்.
இன்னொரு இளைஞர் சிறிய மரத்தின் பின்னால் ஒளிந்துகொள்ள, அந்த இளைஞரின் முன்னால் கேமிரா பதிவு செய்கிறது. உடனே ஒரு பூச்சியை விரட்டுவது போல தனது பேட்டால் விரட்ட முயற்சித்து பின்னர் அங்கிருந்து பதறி ஓடுகிறார்.
இதேபோல மற்றவர்களும் தெரித்து ஓட கொஞ்ச நேரத்தில் அந்த இடம் காலியாகி விடுகிறது. இதனை கொஞ்சம் காமெடி வசனங்கள் சேர்த்து எடிட் செய்து சேலம் காவல்துறையினர் இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த விடியோவும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு முன்னர் இதே பாணியில் திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு பொதுமக்களுக்கு நகைச்சுவையுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node