பள்ளி கல்லூரிகளை பொங்கல் பண்டிகை கழித்து திறக்க முடிவு செய்வதே மாணவர்கள் பெற்றோர்கள் நலன் காக்கும் நடவடிக்கையாக இருக்கும் என்று சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் வரும் 16-ஆம் தேதி முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் இதனையடுத்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இது குறித்து திருச்சி மாவட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களை பள்ளி கல்லூரிகளுக்கு வர அனுமதி அளிப்பது சம்பந்தமாக தமிழக அரசு கவனத்துடன் பரிசீலனை செய்ய வேண்டும்.
தற்போது, கொரோனா தொற்று முழுமையாக முடிவுக்கு வராத நிலையிலும் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக கருதப்படும் நிலையிலும். தொடர்ந்து பல விழாக்கள் விடுமுறைகள் வரவுள்ள நிலையிலும் கடந்த ஏழு எட்டு மாதமாக பள்ளி கல்லூரிகள் மூடி கிடக்கும் நிலையிலும் இப்போது பள்ளி கல்லூரிகளை திறக்காமல் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கழித்து திறக்க முடிவு செய்வதே மாணவர்கள் பெற்றோர்கள் நலன் காக்கும் நடவடிக்கையாக இருக்கும் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
unknown node