பாஜக கூட்டணி., அதிமுகவில் முதல் விக்கெட் அவுட்! SDPI பரபரப்பு அறிவிப்பு!
அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அதிமுக கூட்டணியில் இருந்து SDPI கட்சி வெளியேறுகிறது என அக்கட்சி பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.

சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா இந்த கூட்டணி குறித்து அறிவித்தார். தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் கூட்டணி என்றும், 2026-ல் NDA கூட்டணி ஆட்சியமைக்கும் என்றும் தெரிவித்தார்.
அதிமுக – பாஜக கூட்டணி அறிய்வித்தது முதலே பல்வேறு அரசியல் நகர்வுகள் நிகழ்ந்து வருகின்றன. இதில் சில அதிமுக நிர்வாகிகளுக்கே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. சில நிர்வாகிகள் பொது மேடைகளில் வெளிப்படையாகவே தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திவிட்டனர். மேலும் கூட்டணி அரசு, கூட்டணி என்ற விவகாரமும் போய் கொண்டிருக்க, ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்த கட்சியினரும் தங்கள் அதிருப்தியை வெளிக்காட்ட தொடங்கியுள்ளனர்.
அதிமுக கூட்டணியிலிருந்து எஸ்டிபிஐ கட்சி விலகுகிறது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக் அறிவித்துள்ளார். மேலும், பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்த எந்த அரசியல் கட்சியுடனும் SDPI கட்சி கூட்டணி அமைக்காது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாஜகவை எதிர்க்கக்கூடிய அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறது. பாஜக கூட்டணிக் கட்சிகளை எஸ்டிபிஐ கட்சி என்றும் ஆதரிக்காது. தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்பதே பாஜகவின் முழக்கமாக இருந்தது. அப்படி கூறிவிட்டு தற்போது திராவிட கட்சிகள் மேலே சவாரி செய்ய வந்திருக்கிறார்கள். இப்போது அந்த முழக்கம் எங்கே போனது?
அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க, பாஜக எவ்வளவு பெரிய நிர்ப்பந்தம் கொடுத்து, எத்தனை வாய்ப்புகள் கொடுத்தார்கள் என்று அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகத் தெரியும். பாஜகவுக்கு இது கைவந்த கலை. தனக்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்பதற்காக அவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவார்கள்.
நீதி நேர்மை நியாயம் அனைத்தையும் துறந்து சாணக்கிய தத்துவ அடிப்படையில் எந்த எல்லைக்கும் அவர்கள் போவார்கள். அந்த அடிப்படையில் அதிமுகவை கபிலிகரம் செய்திருக்கிறார்கள். பாஜகவை பொறுத்த வரையில் தனக்கு சாதகமாக வேண்டுமென்றால் யார் காலிலும் விழுவார்கள். தனக்கு தேவையில்லை என்றால் யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார்கள். அதுதான் பாஜகவின் நிலைப்பாடு.
எங்கெல்லாம் பாஜக அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து இருக்கிறதோ, அங்கு இருக்கக்கூடிய மாநில கட்சிகள் அழிந்துபோனது தான் வரலாறாக இருக்கிறது. அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது. அந்த வழியில் தமிழ்நாடு ஒரு அரசியல் கட்சியை இழக்கப்போகிறது என்பது உண்மை. இந்த முடிவை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கதவுகளையும் சாத்திவிட்டதால் வாசலில் படுத்துக் கிடந்தார்கள். எந்த வாசலாவது திறக்காதா? எந்த ஜன்னலாவது திறக்காதா என பாஜக தவம் கிடந்தார்கள். இப்போது நிர்ப்பந்தம் நெருக்கடியில் கூட்டணியை நோக்கி மிதந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. 0
அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து விடுவித்து, கட்சியையும் தொண்டர்களைப் பாதுகாக்க வேண்டும். பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும். அவர்களை விலக்கிவிட வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பாஜகவை வெறுக்கிறார்கள். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியில் வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.
நாங்கள் நிச்சயமாக ஒரு கூட்டணிக் கட்சியில் இருப்போம். எந்த கட்சி என்பது குறித்து 9 மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என SDPI கட்சியின் பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக் கூறியுள்ளார்.