சொந்த ஊரில் மாணவியின் உடல்.. உள்ளூர் மக்கள், உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலுக்கு அவரது உறவினர்கள், உள்ளூர் மக்கள் கண்ணீர் அஞ்சலி.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலுக்கு அவரது உறவினர்கள், உள்ளூர் மக்கள் கண்ணீர் அஞ்சலி.

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை இன்று பெற்றுக் கொள்ளவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற்றோர் சம்மதம் தெரிவித்திருந்தனர். மாணவியின் உடலை இன்று காலை 6-7 மணிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இன்றுக்குள் இறுதிச்சடங்கை முடிக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். இரண்டு முறை மாணவியின் உடல் மறுகூராய்வு செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, மாணவியின் உடலை, பெற்றோர் இன்று பெற்றுக்கொண்டனர். கடந்த 13-ஆம் தேதி தனியார் பள்ளியில் உயிரிழந்த நிலையில், 11 நாட்களுக்கு பின் கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின் கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. பெரியநெசலூர் வீட்டில் வைக்கப்பட்டுள்ள பள்ளி மாணவியின் உடலுக்கு உள்ளூர் மக்கள், உறவினர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

உயிரிழந்த பள்ளி மாணவியின் உடலுக்கு பெரியநெசலூரில் ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அமைச்சர் சிவி கணேசன் இறுதி அஞ்சலி செலுத்தினார். மாணவின் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவியின் இறுதிச் சடங்கு நடைபெறும் வேப்பூர் பெரியநெசலூர் கிராமம், போலீஸார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. கிராமத்துக்குள் நுழையும் வாகனங்களின் எண், ஓட்டுநர் பெயர் எழுதப்பட்டு சோதனைக்குப் பின் அனுமதிக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது.

இதனிடையே, கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ், விபத்தில் சிக்கியது என்றும் முன்னால் சென்ற கார் திடீரென நிறுத்தப்பட்டதால் விபத்து என தகவல் வெளியாகியிருந்தது. இருப்பினும் எந்த பாதிப்பும் இல்லாமல் மாணவியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்று இருதுசடங்கு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மாணவியின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் தொடங்கின. இன்னும் சற்று நேரத்தில் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.