மதுரை ரயில் விபத்து : சிலிண்டர் எப்படி ரயில் உள்ளே வந்தது.? அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி.! 

மதுரை ரயில் தீ விபத்து நடந்த இடத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

Minister RB Udhayakumar says about Madurai Train Fire Accident

உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்வதற்காக 60-க்கும் மேற்பட்டோர் சிறப்பு ரயிலில் பயணித்துள்ளனர். இவர்கள் கடந்த 17-ஆம் தேதி யாத்திரையாக தமிழகம் வந்துள்ளனர். நேற்று நாகர்கோவில் பத்மநாதர் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு மதுரை வந்தடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த ரயில் பெட்டியானது மீண்டும் சுற்றுலா செல்வதற்காக வேறொரு ரயிலில் இணைக்கப்படுவதற்காக மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா விரைவு ரயிலில் தேநீர் தயார் செய்வதற்காக சிலிண்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீ அனைத்து பெட்டிகளுக்கு மளமளவென பரவிய நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ரயிலில் பயணித்த பயணிகள் சிலிண்டரை எடுத்து சென்ற நிலையில்,  ஏற்பட்ட தீ  விபத்தில், இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.

தீ விபத்தில் சிக்கி தற்போது வரை பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்தில்  உயிரிழந்தவர்கள் உத்திரபிரதேசத்தை   சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா , ரயில்வே அதிகாரிகள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை ரயில் தீ விபத்து நடந்த இடத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,  லக்னோவில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஆன்மீக சுற்றுலா வந்த பக்தர்கள், காலை சமையல் செய்யும் போது சிலிண்டர் விபத்து நிகழ்ந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.

இதுவரை 9 பேர் உயிரிழந்ததாக வெளியான செய்தி வேதனை அளிக்கிறது. அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு செய்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதற்கு அறிவுறுத்தினார்.

ஆய்வு செய்ததில் ரயில் பெட்டி முழுவதும் எரிந்து சாம்பலாகி உள்ளது. இதற்கு முன்னர் இவ்வாறு ஒரு விபத்து நடந்தது இல்லை. இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இவர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.

பேரிடர் மேலாண்மை குழுவுக்கென வரைமுறைகள் உள்ளன அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். சமையல் செய்யும் சிலிண்டர் எப்படி ரயில் பெட்டிக்குள் உள்ளே வந்தது என தெரியவில்லை. அதனை அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும். சாப்பாடு எல்லாம் அவர்களே (ரயில்வே) தந்துவிடுவார்கள். உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த விபத்தை தடுத்து இருக்கலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.