ஜன.3ம் முதல் 15-18 வயதுடையோருக்கு தடுப்பூசி – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

Tamil Nadu is the first state in the country to have vaccinated more pregnant women, said Minister Ma Subramanian.

கர்ப்பிணிகளுக்கு அதிக தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

தமிழகம் முழுவதும் இன்று 16வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு முழுவதும் இன்று 16வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 80 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.

இதுவரை ஒமிக்ரான் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 22 பேர் மட்டுமே மருத்துவமனையில் உள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட 34 பேரில் 12 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இந்தியாவிலேயே கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்றும் தயக்கமின்றி அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சென்னையில் இன்று 2.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1600 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என கூறிய அமைச்சர், தமிழகத்தில் இதுவரை 8.14 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதில், 84.87% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 55.85% பேர் 2ம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர் என்றார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், மத்திய அரசு வழிகாட்டுதல்படி ஜனவரி 3ம் தேதி முதல் 15-18 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என்றும் அறிவித்தார். மேலும், ஜனவரி 10ம் தேதி முதல் 60 வயதை தாண்டியோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இதனிடையே, நேற்று நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் மோடி, ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 15- 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பு ஊசிகள் செலுத்தும் பணி ஜனவரி 10ஆம் தேதி முதல் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.