அலைகடலென வரவேற்பு., அம்மா ஆட்சியை சசிகலா தலைமையில் அமைப்போம் – டிடிவி தினகரன்

Amma People's Progressive League was started to prevent DMK from coming back to power - TTV Dinakaran

திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது – டிடிவி தினகரன்

மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா பெங்களூரில் 4 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு தமிழகத்துக்கு வரும் 7-ஆம் தேதி திரும்பி வருகிறார். அதனால் அம்மாவின் உண்மையான தொண்டர்கள், தமிழக மக்கள் சசிகலா நல்லவிதமாக வந்து சேர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் கன்னியாகுமரி முதல் திருத்தணி வரை உள்ள கழக தொண்டர்கள் தமிழக எல்லையிலிருந்து சென்னை வரை அலைகடலென திரண்டு இருந்து சசிகலாவை வரவேற்க தயாராகி வருகிறார்கள். எனவே, சசிகலாவுக்கு அளிக்கும் வரவேற்பால் யாருக்கும் கெட்ட பெயர் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யாருக்கும் எந்த சொந்தரவும் இல்லாமல் வரவேற்பு அளிக்க வேண்டும். இந்த ஆட்சியை அமைத்துவிட்டுத்தான் சசிகலா சிறைக்கு சென்றார்.

உண்மையான குற்றவாளி யார் என்று தமிழக மக்களுக்கு தெரியும். சசிகலாவின் விடுதலை நாளன்று, அம்மாவின் நினைவிடம் திறக்கப்பட்டது. இது சின்னம்மாவை வரவேற்கும் விதமாக அன்று நினைவிடம் திறக்கப்பட்டதாக நான் நினைக்கிறன். சசிகலா விடுதலை என்ற செய்தி வரத் தொடங்கியதும், தமிழகத்தில் கெமிக்கல் ரியாக்சன் ஏற்பட்டுள்ளது. எப்படியும் சசிகலா இந்த ஒரு வாரத்தில் வந்துவிடுவார் என்ற அம்மா நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று போய்விடுமா? ஜெயலலிதா நினைவிடம் எப்படியும் திறந்தாக வேண்டும், அப்போது, சென்று மரியாதையை செலுத்துவார். இதற்கு வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் நிச்சியம் தீர்ப்பு வழங்குவார்கள். கே.பி முனுசாமி மன்னிப்பு கேட்டால் அதிமுகவில் இணைக்க பரிசீலினை செய்யப்படும் என்று கூறியது குறித்த கேள்விக்கு, யார் தவறு செய்தவர்கள், யார் மன்னிப்பு கேட்க கூடியவர்கள், யார் மன்னிக்கபட வேண்டியவர்கள், என்பதற்கு காலம் பதில் சொல்லும்.

தீயசக்தி திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது. சசிகலா தலைமையில் ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம். உண்மையான தொண்டர்கள், விசுவாசத்தின் பக்கம் உள்ளவர்கள் சசிகலா பக்கம் இருக்கிறார்கள். சசிகலாவின் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்றம் முடிவு செய்யும் வரை பொறுத்திருப்போம். அதிமுகவை மீட்டெடுக்க சட்டப்போராட்டத்தை சசிகலா தொடருவார் என்று தெரிவித்துள்ளார்.